நாம் கடந்த வந்த பாதையில் எத்தனையோ விதமான
மனிதர்களை பார்த்து இருப்போம், பழகி இருப்போம்…ஆனால் வெகு சிலரே உங்கள்
மனதை விட்டு நீங்காமல் பச்சை பசேல் என்று என்றும் உங்கள் நினைவில் இருந்து கொண்டே
இருப்பார்கள், அப்படி பட்ட ஒரு நபரை பற்றி உங்களோடு
பகிர்ந்து கொள்ள ஆசை….
அந்த நபர் வாசிங்டன் வட்டார
தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பத் தலைவி, அம்மா,
எல்லா வற்றிக்கும் மேலாக ஒரு சமூக சேவகி. இவர் கடந்த வந்த
வாழ்க்கையில் எல்லாமே ஒரே சோகம்…ஆனால் அந்த வருத்தம்
தெரியாமல் என்றும் புன்னகையுடன், சமூக சேவைக்காக என்றும் காத்துக்
கொண்டே இருப்பார்…
அவரைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக சொல்லி
விடுகிறேன்…1993ல் ஈழத்தில் மிகப் பெரிய அழிவிற்கு பின், புலம்
பெயர்ந்த எண்ணற்ற ஈழத் தமிழர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது வயது 51. நல்ல வடிவான பெண். களையான முகம், துறுதுறு கண்கள்.
அவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பெண் மற்றும் ஒரு ஆண். மூன்று பெண்
குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் சிறு வயதில், அதாவது 5
வயது வரை நன்றாக இருந்துவிட்டு, அதற்கு பிறகு
இருவரும் மனவளர்ச்சி குன்றிய (Autism) பெண்கள். அவர்களுக்கு
வயது தற்பொழுது 17,18 இருக்கலாம். இந்த இருவருமே அம்மாவை
போலவே களையான எடுப்பான முகவடிவம் கொண்டவர்கள், நேரில்
பார்த்தால் அவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவே தெரியாது!
இப்படிப் பட்ட இரண்டு பெண் குழந்தைகளை
வைத்துக் கொண்டு அவர் தமிழ்ச் சங்கத்திற்கும், தமிழ்ச் சங்க பேரவைக்கும், ஈழத்து உரிமைகளுக்கும் தொடர்ந்து போராடுவதை பார்க்கும் பொழுது மிக மிக
பிரம்மிப்பாக இருக்கிறது. ஈழப் போரில் வாள் எடுத்து போராடிய எண்ணற்ற தமிழர்களுக்கு
நிகராக இவர் தனது வாழ்க்கையில் தினம் தினம் போராடி வருகிறார் என்று நினைத்தாலே
நம்ப முடியாது!
ஒருமுறை மதியம் தமிழ்ச் சங்க செயற்குழு
கூட்டம், மொத்தம் 11 பேர் கொண்ட குழுவில் அவர்களும் ஒரு நபர். செயற்குழு கூட்டம் மதியம் 3.00
மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் 2.45 மணிக்கு
தமிழ்ச் சங்க தலைவரை அழைத்து, நான் சற்று கால தாமதமாக
வருகிறேன், எனது பெண் குழந்தைகள் இருவரும் கண்களில் குத்திக்
கொண்டார்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லுகிறேன், மருத்துவரை பார்த்துவிட்டு உடன் வருகிறேன்
என்றார்! செயற்குழுவில் உள்ளவர்கள் சிலர் தமாதமாக வருவார்கள். மின் அஞ்சலில் கூட
சொல்லமாட்டார்கள். ஆனால் இவரோ இப்படி!!!
4 அல்லது 5 வருடம்
முன்பு, அவருடைய மற்றோரு பெண் குழந்தைக்கு முறைப்படி பரதம்
பயின்று, மிகப் பெரிய பள்ளி வாளகத்தில் அரங்கேற்றம் நடந்தது.
அந்த விழாவிற்கு கிட்டதட்ட 500 தமிழர்கள் வந்து
இருந்தார்கள். நாங்கள் பார்த்த முதல் தமிழ் அரகேற்றம் அது. தமிழ்தாய் வாழ்த்திற்கு
பரதம் ஆரம்பித்து, பாரதி, பாரதிதாசன்,
திருக்குறள், புறநானாறு, சிலப்பதிகாரத்தில் இருந்து நடன காட்சிகள்! என்னவொரு புதுமையான சிந்தனை
அதனை நிறைவேற்றி காட்டிய பாங்கு! விழாவிற்கு வந்த அனைவருக்கும் உணவு தன்னார்வத்
தொண்டர்கள் கொண்ட வந்த உணவு மட்டுமே! இத்தனை நபர்களுக்கு எந்த உணவகத்திலும்
உணவு ஏற்பாடு செய்யாமல் முழுக்க முழுக்க அவரது நண்பர்களும், உறவினர்களும்
உணவை ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விழாவிற்கு நமது கதாநாயகி மிக மிக சாதரண
புடவை அணிந்து கொண்டு வந்து இருந்தார். பட்டு புடவை உடுத்தி பழக்கம் இல்லையாம்! என்ன
ஒரு எளிமை!!!
கடந்த மாதம் நடந்து முடிந்த தமிழ்ச்
சங்கப் பேரவை விழாவில் கிட்டதட்ட 2400 தமிழர்களுக்கும் உணவு அளித்த பங்கு
இவரின் பங்கும் மிக மிக அதிகம்….உணவு ஏற்பாட்டு குழுவோடு
இவர் ஆற்றிய செயல் ஏராளம்…விழாவில் கடைசி தமிழர் சாப்பிட்ட
பிறகே இவர் தினமும் சாப்பிட்டார்!
எல்லாவற்றிக்கும் மேலாக ஈழத் தமிழர்
உரிமைக்கு தொடந்து போராடி வரும் பல இயக்குகளோடு தன்னையும் இணைத்துக் கொண்டு,
வாசிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நின்று அமெரிக்க அதிபரை வேண்டுவதாக
இருக்கட்டும், அல்லது நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாட்டு சபை முன்பு,
ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கு போராடுவதாக இருக்கட்டும் இந்த பெண்
சகோதரியே முன்னால் இருப்பார்….
அவரிடம் ஒரு முறை முள்ளிவாய்க்கால்
சம்பவத்திற்கு பிறகு, அக்கா ஈழத்தின் இன்றைய நிலமை என்ன? ஈழம்
கிடைக்குமா? என்ற கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன
தெரியுமா?
“என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை, என் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை” அமெரிக்காவில்
மனித உரிமை இயக்கங்களோடு தொடர்ந்து போராடி கொண்டு இருப்பேன்…இதுதான்
நான் என் மக்களுக்கு செய்யும் ஒரே கடமை என்றார்!!!
போர்க்களம் கண்டவர்கள் மட்டுமே, போராளிகள் அல்ல!
இப்படி பட்ட நபர்கள் இருக்கும்வரை நம்
தமிழ் சமூகத்திற்கு பெருமை…
அந்த சகோதரியின் பெயர் – எங்கள் ஆசை அக்கா (ஈழ மக்கள் தம் இளைய சகோதரியை ஆசை அக்கா என்று அழைப்பர்) - புஷ்பா ராணி வில்லிம்ஸ்…
தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும். (குறள் 268, துறவறவியல்)
தவ வலிமையால் தன்னுடைய உயிர்தான் என்னும்
பற்று நீங்கப் பெற்றவனை
மற்ற உயிர்கள் எல்லாம் (அவருடைய பெருமை
உணர்ந்து) தொழும்.